FINANCE

OMR-ல் 4500 வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் துவக்கம்

இந்தியாவில், நகர பகுதிகளில் எரிவாயு வினியோக செய்யும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏஜி&பி பிரதம் (AG&P Pratham) உள்ளது.

இந்நிறுவனம் சென்னை, ஓஎம்ஆரில் (OMR) வசிக்கும் மக்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை சமீபத்தில் துவக்கி உள்ளது.

இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதியான கேளம்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் நேரடியாக குழாய் மூலம் எரிவாயு வசதியை பெறலாம்.

அடுத்த சில மாதங்களில் செம்மஞ்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களுக்கும் இத்திட்டம் இந்நிறுவனத்தால் விரிவாக்கம் செய்யபட உள்ளது.

ஓஎம்ஆரில் முதல் முறையாக துவக்கப்பட்டுள்ள இந்த குழாய் இயற்கை எரிவாயு திட்டம் தென்னிந்தியாவில் முன்னணி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக திகழும் அலையன்ஸ் குழுமத்தின் அர்பன்ரைஸ் நிறுவனம் பாடூரில் கட்டிவரும் ‘ரெவல்யூஷன் ஒன்’ ஆடம்பரமிக்க நவீன அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் அர்பன்ரைஸ் நிறுவனத்துடன் செய்துள்ளது. பெட்ரோலிய எரிவாயு அதாவது தற்போது நாம் பயன்படுத்தி வரும் எல்பிஜி–க்கு மாற்றான இந்த குழாய் இயற்கை எரிவாயு மிகவும் பாதுகாப்பானது மற்றும் இதை நாம் சிக்கனமாக பயன்படுத்தலாம்.

அத்துடன் நாம் தற்போது உபயோகித்து வரும் கியாஸ் அடுப்பிலேயே இதைப் பயன்படுத்த முடியும்.

இந்த நிலையில் இந்த குடியிருப்பு வளாகத்தில் 4500 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பை வழங்கும் வகையில், அதன் முதல் கட்டமாக 1200 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் காஞ்சிபுரம் பகுதிக்கான பிராந்திய தலைவர் திருக்குமரன் கூறுகையில்,

ஓஎம்ஆரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் முறையாக எங்களின் குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு திட்டத்தை நாங்கள் துவங்கி இருப்பதன் மூலம், ஒவ்வொரு வீட்டிற்கும் இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் எங்கள் திட்டத்திற்கான பயணத்தில் முன்னோக்கி சென்றிருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் எங்கள் எரிவாயுவை பயன்படுத்தும்போது எல்பிஜி சிலிண்டருக்கு செலவழித்த தொகையில் 10 முதல் 20 சதவீதம் வரை பணத்தை சேமிக்க முடியும்.

மேலும் அவர்கள் இந்த குழாய் எரிவாயுக்கு மாறுவதன் மூலம் பல்வேறு பலன்களையும் அனுபவிக்க முடியும்.

அதாவது எல்பிஜி சிலிண்டர்களை பதிவு செய்தல், அவற்றை வாங்கி வீட்டில் வைத்திருத்தல் மற்றும் அதை கையாளுதல் ஆகியவற்றில் இருந்து வெளியேறி எந்தவித தொந்தரவும் இல்லாமல் தினசரி எளிமையாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் எங்களின் எரிவாயுவை பயன்படுத்தலாம்.

அர்பன்ரைஸ் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் ரெவல்யூஷன் ஒன்னில் வீடு வாங்கி உள்ள அனைவருக்கும் தனித்தனி இணைப்புகள் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் எங்களின் இந்த குழாய் இயற்கை எரிவாயு இணைப்பை வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அலையன்ஸ் குழுமம் மற்றும் அர்பன்ரைஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் பி. சந்திரசேகர் ரெட்டி கூறுகையில்,

எங்களின் ரெவல்யூஷன் ஒன் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு ஏஜி&பி பிரதம் நிறுவனத்துடன் இணைந்து LPG கியாசுக்கு மாற்றாக குழாய் இயற்கை எரிவாயு இணைப்பை அறிமுகம் செய்துள்ளோம்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மற்றும் வரவிருக்கும் அடுக்குமாடி குடிருப்புகளிலும் இந்த குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு திட்டத்தை வீட்டின் உரிமையாளர்களுக்கு வழங்க இருக்கிறோம்.

சமூகத்தின் மேம்பாட்டிற்கு பங்களிக்கும் புதுமையான தீர்வுகளுடன், எங்கள் குடியிருப்பாளர்களுக்கு நவீன வாழ்க்கை முறைகளை வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டை இந்த திட்டம் மேலும் வலுப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் எந்தவிதமான இடையூறும் இல்லாத தொடர்ச்சியான எரிவாயுவை வழங்க இருக்கிறோம்.

இதன் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் மிகவும் வசதியான வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியும்.

இது மேலும் அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

ஏஜி&பி பிரதம் நிறுவனம் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சுத்தமான, நம்பகமான மற்றும் குறைந்த கட்டணத்தில் குழாய் எரிவாயு வினியோகத்தை வாரத்தில் 7 நாளும் 24 மணி நேரமும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் இப்பகுதியில் 28 சிஎன்ஜி கியாஸ் நிரப்பும் நிலையங்களைக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் இந்த நிலையங்களை 50ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் தனது குழாய் எரிவாயு நெட்வொர்க்கை 700 கிலோமீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்தி ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம், முடிச்சூர், தாம்பரம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

ஓஎம்ஆர் பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் தற்போது 354 ரூபாய் கட்டணம் செலுத்தி புதிய குழாய் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். புதிய இணைப்பு மற்றும் சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் 1800 2021 999 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *