காவேரி மருத்துவமனை குழுமம் ‘ஜிஐ ப்ளீட்’ சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடக்கம்
சென்னை: குடல் இரத்தக்கசிவு (GI Bleed) போன்ற அவசர நிலைகளுக்கு விரைவான மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கும் நோக்கில், காவேரி மருத்துவமனை குழுமம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள தனது அனைத்து மருத்துவமனைகளிலும் பிரத்யேக ‘ஜிஐ ப்ளீட்’ சிகிச்சை மையங்களை தொடங்கியுள்ளது.
இரு மாநிலங்களிலும் செயல்படும் 12 மருத்துவமனைகள் மூலம், குடல் இரத்தக்கசிவால் பாதிக்கப்படும் நோயாளிகள் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பல்துறை நிபுணர்கள் இணைந்து வழங்கும் மேம்பட்ட சிகிச்சையை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் அவசர சிகிச்சை மருத்துவர்கள், இரைப்பை-குடல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். நோயாளி அவசர பிரிவில் சேரும் தருணத்திலிருந்து ஆபத்து மதிப்பீடு, ICU அனுமதி, 24 மணி நேர அவசர எண்டோஸ்கோபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் தேவையான அறுவை சிகிச்சை வரை, தெளிவான மருத்துவ நடைமுறைகளின் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
தொடக்க விழாவில், காவேரி செரிமான அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பி. பாசுமணி கூறுகையில், “குடல் புண், இரைப்பை பாதிப்பு அல்லது கல்லீரல் நோய்கள் காரணமாக குடல் இரத்தக்கசிவு ஏற்படலாம். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சை அளிப்பது அவசியம்; தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தாக மாறலாம். ஒவ்வொரு கட்டத்திலும் தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய சிறப்பான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார்.
காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “மருத்துவ அவசரநிலைகளில் சரியான நேரத்தில் மேம்பட்ட சிகிச்சை கிடைப்பது மிக முக்கியம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள எங்கள் மருத்துவமனைகள் மூலம் குடல் இரத்தக்கசிவுக்கான தரமான மற்றும் பாதுகாப்பான சிகிச்சையை மக்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே வழங்குகிறோம்,” என்றார்.
குடல் இரத்தக்கசிவுக்கான அவசர மற்றும் தீவிர சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாக இந்த ‘ஜிஐ ப்ளீட்’ மையங்கள் அமைந்துள்ளன.

