மூளை செயல்பாட்டு விழிப்புணர்வு மாதத்தையொட்டி பிரசாந்த் மருத்துவமனைகள் சார்பில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை: சென்னையின் முன்னணி பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான பிரசாந்த் மருத்துவமனைகள் பல்வேறு நோய்கள் குறித்தும் அதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது மூளை செயல்பாட்டு விழிப்புணர்வு மாதத்தையொட்டி சென்னை நகரில் உள்ள மக்களிடையே பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக #StopTheBlock என்ற முயற்சியின் கீழ், நடமாடும் வாகனத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பக்கவாதம், அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு குறித்து அறிந்து கொள்ள இம்மருத்துவமனை மாதிரி மூளையை வடிவமைத்துள்ளது. நகர் முழுவதும் ஒரு மாதம் பயணிக்கும் இந்த வாகனத்தை மணலி மாநகர காவல் உதவி ஆய்வாளர் கனகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை நகரில் உள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களை சென்றடையும் நோக்கில், இந்தப் புதுமையான பிரச்சாரம், பிளாஷ் மாப், மீம் நிகழ்ச்சிகள், வேடிக்கை நிகழ்ச்சிகள், இன்டராக்டிவ் கேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுடன் நடமாடும் வாகனம் சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்ல இருக்கிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
நாடு முழுவதும் கோடை மற்றும் குளிர்காலம் ஆகிய இரண்டு பருவங்களிலும் பக்கவாத நோய் அதிகரித்து வருவதால், பிரசாந்த் மருத்துவமனைகள், #StopTheBlock என்னும் இந்த விழிப்புணர்வு திட்டத்தை துவக்கி உள்ளது. இதன் மூலம் மக்கள் இப்போதிலிருந்து தொடங்கி குளிர்காலம் முழுவதும் சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரசாந்த் மருத்துவமனை நிர்வாகக் குழு, மருத்துவர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், மணலி மாநகர காவல் உதவி ஆய்வாளர் கனகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து பிரசாந்த் மருத்துவமனைகள் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், தேசிய அளவிலும் உலக அளவிலும் பக்கவாதம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ‘சேவ் யங் ஹார்ட்ஸ்’ என்னும் எங்களின் பிரச்சாரத்திற்குப் பிறகு, இந்த #StopTheBlock நமது மக்களின் ஆரோக்கியத்திற்கான மற்றொரு சிறந்த மற்றும் பொருத்தமான முயற்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
பக்கவாத சிகிச்சையில் முக்கியமான ‘பொற்காலம்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இது சென்னை முழுவதும் சுமார் 20 லட்சம் மக்களை சென்றடையும் என்று நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் பக்கவாத ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து விரைவாகச் செயல்படுவது குறித்து சமூகத்திற்குக் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அது சம்பந்தமான ஆபத்துகளைக் கணிசமாகக் குறைத்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தார்.
இது குறித்து கொளத்தூர் பிரசாந்த் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் பாரி முத்துக்குமார் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் சென்னையில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் பக்கவாதம் பாதிப்பு 51% அதிகரித்துள்ளது, 2021-ம் ஆண்டில் மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக உட்கார்ந்த வாழ்க்கை முறை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் இந்தப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியது, அத்துடன் இளைஞர்கள் இடையே பக்கவாதம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது இது குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ளபோதிலும், ஆரம்ப நிலையில் இந்த நோயை கண்டறிவது என்பது மிகவும் அவசியமாகிறது. அதற்காக, நாங்கள் எங்கள் #StopThe Block பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம், மேலும் இந்த முயற்சியின் மூலம் சென்னை நகர மக்கள் சரியான நேரத்தில் பக்கவாத அறிகுறிகளை கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
#StopTheBlock முயற்சியானது, பள்ளிகள், பொது இடங்கள் மற்றும் நகரம் முழுவதும் அதிக மக்கள் கூடும் பகுதிகளில் நடமாடும் வாகனத்தில் பல்வேறு வேடிக்கையான நிகழ்ச்சிகள் மூலம் உயிர்காக்கும் பக்கவாத விழிப்புணர்வை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில், ஒலி-ஒளி காட்சிகள் இடம்பெற்று இருப்பதோடு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்படும். மேலும் மார்க்கெட், போக்குவரத்து மையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்களுடன் நேரடியான கலந்துரையாடல்களும் நடைபெறும். மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்கள் உட்பட அந்தந்த பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அல்லது நடத்த விரும்புபவர்கள் 99417 66850 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.