General

34 வயது ஆணுக்கு அட்ரீனல் கட்டியை அகற்றி AINU மருத்துவமனை சாதனை

சென்னை, ஏப்ரல் 9, 2024: AHHக்கு சொந்தமான, இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை நெட்வொர்க்கான, ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU) சென்னை மருத்துவமனை, தனது சென்னை மையத்தில் 34 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு அட்ரீனல் கட்டியை அகற்றும் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

ஃபியோக்ரோமோசைட்டோமா (Pheochromocytoma) என்று அழைக்கப்படும், மிகவும் அரிதான அட்ரீனல் கட்டி (right adrenal tumour) நோயாளியின் வலது புறத்தில் இருப்பதை கண்டுபிடித்து அவருக்கு லாப்ரோஸ்கோபிக் முறையில் வலது அட்ரீனலெக்டமி என்ற சிக்கலான அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.

இந்த நோயாளிக்கு கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, வயிற்று வலி, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல இணை நோய்கள் இருந்தன.

மிகவும் கவனமாக ஆராய்ந்ததில் அவருக்கு வலது அட்ரீனலில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த கட்டிகள் கேடேகோலோமின்ஸ் (catecholamines) என்ற ஹார்மோன்களை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும், அதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம், வேகமான/அதிகமான இருதய துடிப்பு, படபடப்பு, வேர்த்தல், தலை வலி மற்றும் அதிக இரத்த சர்க்கரை அளவு போன்றவை ஏற்படும்.

இந்த சிக்கல்கள் எல்லாம் இருந்ததால் அவருக்கு ஒரு நுணுக்கமான அணுகுமுறையில் சிகிச்சை அளிப்பது அவசியமாக இருந்தது என்று AINU சென்னையின் நிர்வாக இயக்குனரும், அனுபவம் மிகுந்த சிறுநீரக பராமரிப்பு மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் வெங்கட்சுப்ரமணியம் கூறினார்.

இந்த வகை கட்டிகளுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சையின் போது பல சிக்கல்கள் இருக்கும், குறிப்பாக நோயாளியின் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் வேறுபாடுகளால் இரத்த அழுத்தம் சிகிச்சையின் போது அதிகரிப்பதும், கட்டியை அகற்றிய பிறகு மிகவும் குறைந்து போவதுமாக இருக்கும்.

மேலும் இந்த நோயாளிக்கு கட்டி 10cm அளவில் இருந்ததால் மிகவும் சிக்கலாகி, அறுவை சிகிச்சையை மிகுந்த துல்லியம் மற்றும் கவனத்துடன் செய்ய வேண்டி இருந்தது.

ஆனால் எங்களிடம் உள்ள அதிநவீன வசதி மற்றும் நிபுணர்களின் திறமையை கொண்டு இந்த சிக்கல்களை எல்லாம் கடந்து மிகவும் வெற்றிகரமாக நோயாளிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற முடிந்தது என்று AINU சென்னையின் நிர்வாக இயக்குனரும், தலைமை சிறுநீரக பராமரிப்பு மருத்துவருமான மருத்துவர் அருண்குமார் கூறினார்.

AINU சென்னையில் உள்ள உட்சுரப்பியல் (Endocrinology), இருதயம் (Cardiology), மயக்கவியல் (Anesthesia), பொதுநல மருத்துவம் (Physician) ஆகிய பல துறைகளை சார்ந்த நிபுணர்கள் அனைவரும் சேர்ந்து நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரையில் அவரது உடல்நலத்தை பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்தார்கள்.

முழுமையான நோயறியும் ஆராய்ச்சிகள் மற்றும் தேவையான அனுமதிகளை பெற்ற பிறகு மருத்துவர்கள் குழு, மிகுந்த நிபுணத்துவம், கடுமையான நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளுடன் அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் தேர்ச்சி பெற்றார். 500 mg / dl அளவில் இருந்த இரத்த சர்க்கரை அளவானது 100mg/dl அளவுக்கு குறைந்து நீரிழிவு நோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்தார்.

அதனால் நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தத்திற்காக அவர் எடுத்து வந்த அனைத்து மருந்துகளும் நிறுத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *