General

பொறியியல் மாணவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் உதவித்தொகை

சென்னை, ஏப்.16:

Institution of Engineering and Technology (IET) என்னும் கல்வி நிறுவனத்தின் ஐ.இ.டி இந்தியா ஸ்காலர்ஷிப் விருதிற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து 8-ஆவது ஆண்டாக இந்த கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. வருங்கால பொறியியல் தலைவர்களை கௌரவிக்கும் விதமாக மொத்தம் 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.

அனைத்து AICTE, UGC ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் இந்த கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் உள்ள இளங்கலை பொறியியல் மாணவர்களின் தனிப்பட்ட சிறப்பையும் புதுமையையும் திறமையையும் பரிசு அளித்து கவுரவிக்கும் நோக்கில் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தை இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி செயல்படுத்தி வருகிறது.

இது நாட்டின் இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை ஆகும்.

இதில் பங்கேற்ற முந்தைய வெற்றியாளர்கள் ஆப்பிள், போயிங், டெலாய்ட் மற்றும் எம்ஐடி போன்ற முன்னணி உலகளாவிய நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர், மேலும் சிலர் தொழில் முனைவோராகவும் மாறியுள்ளனர்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்கள், படைப்பாற்றல், புதுமை மற்றும் விளக்கக்காட்சி திறன் ஆகிய 4 நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நிலை குழுவில் நாட்டின் முக்கிய கல்வியாளர்கள் மற்றும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கார்ப்பரேட் தலைவர்கள் வழிநடத்துவர். இந்த குழுவிற்கு கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அபிஜித் சக்ரபர்தி தலைமை வகிக்கிறார்.

இதுகுறித்து பேராசிரியர் அபிஜித் சக்ரபர்தி பேசுகையில், “IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது 2024-ன் தொடக்க விழாவைப்பற்றி அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எட்டாவது விருது நிகழ்வில் இந்திய பொறியியல் சமூகத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் உள்ளங்களுடன் செயல்பட நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

எங்களது கடந்தகால வெற்றியாளர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளனர், மேலும் அவர்களின் சாதனைகளில் நாங்கள் பெருமையடைகிறோம். IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருதுடன் கூடிய சிறந்த பாரம்பரியத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இளங்கலை பொறியியல் மாணவர்கள் இந்த ஆண்டு கொண்டு வரும் புதுமையான கண்டுபிடிப்புளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.

கடந்த முறை 43,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

2024 பதிப்பிற்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன. மேலும் தகவலுக்கு- https://bit.ly/3TSwZYf என்று இணையதளத்தை பார்வையிடவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *