2026-27 முதல் காலாண்டில் ASCI-க்கு வரலாறு காணாத 99.7% தன்னார்வ இணக்கம்
சென்னை: இந்திய விளம்பரத் தரக் கவுன்சில் (ASCI), 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) இதுவரை இல்லாத அளவுக்கு 99.7% தன்னார்வ இணக்க விகிதத்தை பதிவு செய்துள்ளது. ASCI வழங்கிய விளம்பரத் திருத்த மற்றும் நீக்க பரிந்துரைகளை, பல்வேறு துறைகளைச் சேர்ந்த விளம்பரதாரர்கள் தன்னார்வமாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டதே இந்தச் சாதனைக்கு காரணமாகும்.
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் பல்வேறு தளங்களைக் கொண்ட டிஜிட்டல் விளம்பரச் சூழலில் இந்த அளவிலான இணக்கம் கிடைத்திருப்பது, நுகர்வோர் நம்பிக்கையைப் பாதுகாக்கும் பொறுப்பான விளம்பர நடைமுறைகளுக்கு தொழில்துறை அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
ASCI-யின் ஆண்டறிக்கையின்படி, 2025-26 நிதியாண்டில் தன்னார்வ இணக்க விகிதம் 86% ஆகவும், 2024-25-ல் 83% ஆகவும் இருந்த நிலையில், தற்போது அது 99.7% ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
2026-27 முதல் காலாண்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,089 விளம்பரங்கள் தொடர்பாக 1,616 வழக்குகளை ASCI ஆய்வு செய்தது. இதில் 179 விளம்பரங்கள் இன்ஃப்ளூயன்சர் (Influencer) விளம்பரங்கள் தொடர்பானவை. டிஜிட்டல் விளம்பரத் துறையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதையும் இது காட்டுகிறது.
டிஜிட்டல் தளங்களில் வேகமான விளம்பர வெளியீடுகள், பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறுவனங்கள் இருப்பதால் ஒழுங்குமுறையை அமல்படுத்துவது சவாலானதாக இருந்தாலும், பெரும்பாலான விளம்பரதாரர்கள் ASCI-யின் அறிவுறுத்தலின்படி விளம்பரங்களை உடனடியாக திருத்தியோ அல்லது திரும்பப் பெற்றோ இணக்கம் காட்டியுள்ளனர்.
இந்த இணக்கம் பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சிறிய நிறுவனங்கள், வளர்ந்து வரும் பிராண்டுகள் மற்றும் தனிப்பட்ட இன்ஃப்ளூயன்சர்களிடமும் காணப்பட்டிருப்பது, பொறுப்பான விளம்பர கலாச்சாரம் பரவலாக உருவாகி வருவதை எடுத்துக்காட்டுகிறது.
அச்சு மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் கடந்த ஆண்டே 97% இணக்கம் பதிவாகியிருந்த நிலையில், தற்போது டிஜிட்டல் விளம்பரங்களிலும் அதே அளவிலான தன்னார்வ இணக்கம் உருவாகியுள்ளது. இது இந்திய விளம்பரத் துறையின் சுய-ஒழுங்குமுறை அமைப்புக்கு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து ASCI-யின் தலைமைச் செயல் அதிகாரியும் பொதுச் செயலாளருமான மனிஷா கபூர் கூறுகையில், “99.7% தன்னார்வ இணக்க விகிதம் என்பது பொறுப்பான விளம்பர நடைமுறைகளுக்கான தொழில்துறையின் உறுதிப்பாட்டையும், இந்தியாவின் சுய-ஒழுங்குமுறை அமைப்பின் செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது. உண்மையான மற்றும் வெளிப்படையான தகவல்தொடர்பே நுகர்வோர் நம்பிக்கையை உருவாக்குகிறது என்பதை விளம்பரதாரர்கள் தற்போது அதிகமாக உணர்ந்து வருகின்றனர். விளம்பரதாரர்கள், ஏஜென்சிகள், இன்ஃப்ளூயன்சர்கள், டிஜிட்டல் தளங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் ASCI ஆகிய அனைத்துத் தரப்பினரின் கூட்டு முயற்சியால் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. எதிர்காலத்திலும் புதுமையான விளம்பர வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதோடு, நுகர்வோர் நலனுக்கு முன்னுரிமை வழங்கும் பணியை ASCI தொடர்ந்து மேற்கொள்ளும்,” என்றார்.

