POLITICAL

கோவூரில் பாஜக கொடிக்கம்பம் அகற்றம்; கட்சியினர் சாலை மறியல்

சென்னை, தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை, குன்றத்தூர் அடுத்த கோவூர் அருகே பாஜக சார்பில் கொடிக்கம்பம் நடப்பட்டு இருந்தது.

கோவூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் கொடி கம்பம் நடப்பட்டதாக கூறி ஊராட்சி நிர்வாகம் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றி விட்டு அந்த பகுதி ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடம் எனக்கூறி வேலி அமைத்து போர்டு வைத்தது.

பாஜக கொடி கம்பத்தை அகற்றிய திமுக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் கோவூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் சாய் சத்யன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் எஸ்.ஜி.சூர்யா, நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாங்காடு போலீசார் கைது செய்தபோது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பாஜகவினர் திடீரென குன்றத்தூர் – போரூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றியதால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *