ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணா நகர் மெட்ராஸ் – ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் இணைந்து 27 பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்கள் வழங்கினர்
சென்னை: பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், தன்னிறைவு வாழ்வாதாரத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில், ரோட்டரி மாவட்டம் 3234-க்கு உட்பட்ட ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணா நகர் மெட்ராஸ், ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் மற்றும் “அநியூ” (ANEW) அமைப்பு இணைந்து 27 பெண்களுக்கு “பிங்க்” ஆட்டோக்களை வழங்கியது.
இந்த நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் உள்ள ஐமா (IAMA) அரங்கில் நடைபெற்றது.
ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் நிறுவனத்தின் நிதியுதவியுடன், “அநியூ” அமைப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு உரிய பயிற்சி பெற்ற 27 பெண் பயனாளிகளுக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணா நகர் மெட்ராஸ் சார்பில் பிங்க் ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் ஆனந்தன் மற்றும் ரொட்டேரியன் பத்மா ஆனந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், ரோட்டரி மாவட்டம் 3234 கவர்னர் ரொட்டேரியன் சுரேஷ் ஜெயின் மற்றும் “அநியூ” அமைப்பின் நிறுவனர் டாக்டர் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணா நகர் மெட்ராஸ் தலைவர் ரொட்டேரியன் மல்லிகா தியாகராஜன், செயலாளர் ரொட்டேரியன் சிங்காரவேல், சமூக சேவை மேம்பாட்டு இயக்குநர் ரொட்டேரியன் பாலசுந்தரம், உதவி கவர்னர் ரொட்டேரியன் தருன் அகர்வால் மற்றும் ஆப்டஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புத் துறை (CSR) பிரதிநிதிகள் தயாநிதி மற்றும் முரளி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள், கிளப் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த முன்னெடுப்பை பாராட்டினர்.
இந்த திட்டம் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமான வாய்ப்பை உருவாக்குவதோடு, சமூகத்தில் அவர்களின் பொருளாதார சுயநிறைவை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டம் அமைந்துள்ளது.

